ஆல்பர்ட்டாவில், மின்சார வாகன உரிமையாளர்கள் $200 வரி செலுத்த வேண்டும் என்று மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வரி ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும். 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது இந்த வரி அறிவிக்கப்பட்டது.
ஆல்பர்ட்டாவில் தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், வரும் ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவது அதிகரிக்கும். மற்ற வாகனங்களை விட மின்சார வாகனங்கள் அதிக எடை கொண்டவை. இதனால் மாகாணத்தில் உள்ள சாலைகளுக்கு சேதம் மற்றும் தேய்மானம் ஏற்படுகிறது என்பது அரசின் விளக்கம். மேலும், மின்சார வாகன உரிமையாளர்கள் எரிபொருள் வரி செலுத்துவதில்லை என்று மாகாண அரசு கூறுகிறது.
உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை பதிவு செய்யும் போது வரி செலுத்த வேண்டும். தற்போதுள்ள பதிவுக் கட்டணத்துடன் கூடுதலாக வரி விதிக்கப்படும். இது வழக்கமான வாகன சாரதிகள் செலுத்தும் தோராயமான வருடாந்த எரிபொருள் வரிக்கு ஏற்ப இருக்கும் என மாகாண அரசாங்கம் கூறுகிறது. ஹைபிரிட் வாகனங்களுக்கு வரி விதிக்கப்படவில்லை. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் சட்டம் கொண்டு வரப்படும் போது வெளியிடப்படும்.
அதே நேரத்தில், ஆல்பர்ட்டா மக்கள் மின்சார வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட $200 வரியை எதிர்த்தும் ஆதரித்தும் பதிலளித்தனர். வரியை அறிவித்ததற்கு ஆல்பர்ட்டா அரசாங்கத்தின் விளக்கத்தை சிலர் விமர்சித்தனர். சிலர் வரி கட்ட முடியாது என்று கூறிய நிலையில், சிலர் அரசின் முடிவை வரவேற்றுள்ளனர்.